மேகதாது அணை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மூன்று வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்க கூடாது என உத்தரவிடக்கோரியும், காவிரியில் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், மதிப்பிடுவதற்கும் அனுமதி வழங்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான சுற்றறிக்கை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் உமாபதி ஆஜராகி, காவிரியின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு அனுமதி உள்ளிட்டவை வழங்குவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான விஷயத்தை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்.
அதேநேரத்தில் இந்த வழக்கில் கூடுதலாக சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தமிழக அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆவணங்களை தாக்கல் செய்ய மூன்றுக்கு வார கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.