தெருநாய்கள் கருணைக்கொலை: கேரள அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் மூலமாக, நரம்பு வழியே குறிப்பிட்ட மருத்துவ மருந்துகளைச் செலுத்தி மட்டுமே வலியற்ற முறையில் உயிர் பிரிக்கப்பட வேண்டும்.
Euthanasia of stray dogs
Published on

கேரள மாநிலத்தில் தெருநாய்களின் பெருக்கம் மற்றும் வெறிநாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஆபத்தான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு முறைப்படி அனுமதி வழங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருணைக்கொலை செய்யப்படுவதற்கான தகுதிகள்

மாநில உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கையில், அனைத்து தெருநாய்களும் கொல்லப்பட மாட்டாது. குணப்படுத்த முடியாத தீவிர நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், வெறிநாய் கடி (Rabies) நோயால் பாதிக்கப்பட்டவை, மற்றும் பொதுமக்களுக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாகவும் வன்முறையாகவும் நடந்துகொள்ளும் நாய்கள் மட்டுமே கருணைக்கொலை செய்ய அனுமதிக்கப்படும்.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் 'தெருநாய் மேலாண்மைக் குழு' அமைக்கப்படும். இந்த அமைப்பின் தலைவர் மற்றும் தகுதி வாய்ந்த அரசு கால்நடை மருத்துவரின் எழுத்துப்பூர்வப் பரிந்துரைக்குப் பிறகே ஒரு நாயைக் கருணைக்கொலை செய்ய அனுமதி அளிக்கப்படும்.

மருத்துவ முறைகள்

நாய்களைப் பிடிக்கும்போதும், கருணைக்கொலை செய்யும்போதும் எவ்வித கொடூரமான அல்லது வன்முறை முறைகளையும் கையாளக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

* துப்பாக்கியால் சுட்டோ, நஞ்சு கொடுத்தோ அல்லது தடியால் அடித்தோ கொல்லக் கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் மூலமாக, நரம்பு வழியே குறிப்பிட்ட மருத்துவ மருந்துகளைச் செலுத்தி மட்டுமே வலியற்ற முறையில் உயிர் பிரிக்கப்பட வேண்டும்.

* பிற நாய்களின் முன்னிலையில் கருணைக்கொலை நிகழ்வை நடத்தக் கூடாது.

பிடிக்கப்படும் தெருநாய்கள் உடனடியாகக் கொல்லப்பட மாட்டாது. அவை 2 முதல் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். அந்த நேரத்தில் விலங்கு நல அமைப்புகளோ அல்லது தனிநபர்களோ அந்த நாய்களைத் தத்தெடுக்க விரும்பினால், அவற்றை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்று வளர்க்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை மூலமாக மாநிலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, விலங்கு நல விதிகளையும் முறைப்படி பின்பற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com