

நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல், 'டிஜிட்டல் கைது' போன்ற புதிய மோசடி முறைகளுக்கு இந்திய நீதித்துறை முன்கூட்டியே மற்றும் தீவிரமாக பதிலளித்து வருவதாக இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்தார்.
லண்டனில் நடைபெற்ற பொருளாதார குற்றங்கள் குறித்த 43-ஆவது சர்வதேச கருத்தரங்கின் நிறைவுரையில் பேசிய அவர், குடிமக்களை ஏமாற்றுவதற்காக காணொளி அழைப்புகள் மூலம் காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளை போல மோசடிக்காரர்கள் வேடமணிந்து மேற்கொள்ளும் 'டிஜிட்டல் கைது' மோசடி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தாமாகவே முன்வந்து கவனத்தில் கொண்டதாக குறிப்பிட்டார்.
"இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த பிரச்சினையின் தீவிரத்தை மதிப்பிடுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இதனால் ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ற தண்டனைகளுடன் கூடிய ஒரு தனிப்பட்ட குற்றப்பிரிவை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.
"நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல், புதிய மோசடி முறைகளுக்கு இந்திய நீதித்துறை முன்கூட்டியே பதிலளிக்கும் பரந்த செயல்பாட்டு முறைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்," என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிரான இந்தியாவின் நவீன அணுகுமுறையைப் பார்க்கும்போது, அதை ஒரு தனிச் சட்டமாகப் பார்க்காமல், பல தசாப்தங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு அடுக்கு கட்டமைப்பாக புரிந்துகொள்வதே சிறந்தது என்று அவர் கூறினார்.
இக்கட்டமைப்பில் சட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை கோட்பாடுகள் ஆகியவை ஒவ்வொன்றும் தனித்தனி பணிகளை செய்கின்றன.
'பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002' மற்றும் 'தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018' ஆகியவற்றைத் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
"இவை குறைபாடுகள் இல்லாத வழிமுறைகள் அல்ல என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். புலனாய்வு அமைப்புகள் பணமோசடி தடுப்புச் சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, தெளிவான காரணங்கள் கூறப்படாமல் கைது செய்யப்படுதல் மற்றும் கிடைக்கப்பெற்ற உண்மைகளின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்படுதல் போன்ற புகார்கள் இதில் அடங்கும். இத்தகைய ஒவ்வொரு நிகழ்விலும், நிலைமையைச் சரிசெய்ய நீதித்துறை தலையிட்டுள்ளது," என்று அவர் கூறினார்.