தேர்வுகள் ரத்து - உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்ட மாணவர் தலைவர்

வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
Devendra Nath Mahto
Published on

பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.

JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

கடுமையான சட்டங்கள் தேவை:

மாநிலத்தில் ஆட்சேர்ப்பு தேர்வு நடைமுறைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மஹ்தோ இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மஹ்தோ, தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக முதல்வர் சோரன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் மாநில அமைச்சர்கள் தீபிகா பாண்டே மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

தேர்வுகளை கண்காணிக்கவும், வினாத்தாள் கசிவை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து பேசும் போது மஹ்தோ கூறியதாவது: "இன்று உண்ணாவிரத போராட்டத்தின் 16-வது நாள்; இந்தப் போராட்டம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 20-ஆம் தேதி முதல்வருடனான சந்திப்பை தொடர்ந்து, ஜூலை 28-ஆம் தேதி சிஐடி (CID) விசாரணை தொடங்கப்பட்டது. முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் JPSC தலைவர் போன்ற உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவர்கள் உட்பட யாரையும் விட்டுவைக்காமல், இந்த விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

துணிச்சலான நடவடிக்கை:

இத்தகைய முக்கிய முடிவை எடுப்பதற்கான துணிச்சலை காட்டிய ஜார்க்கண்ட் அரசுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஒரு தேர்வை ரத்து செய்வது என்பது மிகப்பெரிய சவாலான காரியமாகும். JSSC CGL தேர்வுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை ஏற்கனவே பணி நியமனம் பெறும் நிலையை எட்டியிருந்ததாலும், பல மாணவர்கள் ஏற்கனவே தங்கள் இடங்களை உறுதி செய்திருக்கக்கூடும் என்பதாலும், இது எளிதான முடிவாக இருக்கவில்லை.

இருப்பினும், இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டது... ஜார்க்கண்ட் அரசு, முதல்வர் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தி, எங்கள் எம்.எல்.ஏ., அமைச்சர் தீபிகா பாண்டே, இர்பான் அன்சாரி, மாணவர்கள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டத்தின் போது நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு எங்களுக்குத் தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கிய அறிமுகம் இல்லாத நபர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com