சீ கார்டியன் டிரோன்களை குத்தகைக்கு எடுக்கும் இந்திய கடற்படை - ரூ. 1,943 கோடியில் ஒப்பந்தம்

இரண்டு சீ கார்டியன் டிரோன்களை குத்தகைக்கு எடுக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
MQ-9B SeaGuardian Drone
Published on

இந்திய கடற்படைக்காக, அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா விமானங்களான (UAV) இரண்டு MQ-9B சீ கார்டியன் (Sea Guardian) ரக டிரோன்களை, அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான 'ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்'-இடம் இருந்து ரூ. 1,943 கோடிக்கு குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு சீ கார்டியன் டிரோன்களை கடற்படை இயக்கி வருகிறது. அமெரிக்காவுடனான 4 பில்லியன் டாலர் மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் இது போன்ற 31 டிரோன்களை இந்தியா பெற காத்திருக்கும் நிலையில், கூடுதலாக இரண்டு MQ-9B சீ கார்டியன் டிரோன்களை குத்தகைக்கு எடுக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த மதிப்பு:

இந்த டிரோன்கள் 35 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறக்கும் திறன் கொண்டவை. மேலும் இவை நான்கு 'ஹெல்ஃபயர்' (Hellfire) ஏவுகணைகளையும், சுமார் 450 கிலோ எடையுள்ள குண்டுகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

கடல்சார் கண்காணிப்பு, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் மற்றும் எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை குறிவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என்பதால் இந்த சீ கார்டியன் டிரோன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

தொலைவில் இருந்து இயக்கப்படும் இந்த விமானங்களுக்காக 'ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்' நிறுவனத்துடன் 30 மாத காலத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.

"இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ. 1,943 கோடியாகும். பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர் (கொள்முதல்) முன்னிலையில் இது கையெழுத்தானது," என்று அது கூறியது.

கடல்சார் விழிப்புணர்வு:

MQ-9B சீ கார்டியன் தொலைவில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் மேம்பட்ட அமைப்புகள், அதிநவீன சென்சார்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இந்திய கடற்படையின் கடல்சார் விழிப்புணர்வு திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இந்த அமைப்புகள் கடல்சார் பகுதிகளில் பரந்த பரப்பளவில் தொடர்ச்சியான உளவு தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல் (ISR) ஆகிய சேவைகளை வழங்கும். இதன் மூலம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், அவற்றுக்கு எதிர்வினையாற்றவும் இந்தியாவின் திறன் வலுப்படுத்தப்படும்," என்று அது கூறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com