மும்பை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சாகில் வாகோடே (வயது 20) என்ற மாணவர் எனர்ஜி அன்ட் சயின்ஸ் துறையில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 17ந்தேதி வகுப்பறையில் நடந்த தேர்வை மாணவர் சாகில் வாகோடே எழுதினார்.
தேர்வில் சாட் ஜி.பி.டி.யை பயன்படுத்தி காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த ஆசிரியர்கள் சாகில் வாகோடேவை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாணவர் தற்கொலை விவகாரத்தில் மும்பை ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்து கல்வி நிறுவன வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாணவர் சாகில் வாகோடே தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை ரவீந்திர சக்ரதார் வான்கடே மும்பை போலீசில் புகார் செய்தார்.
அதில் சாதி ரீதியாக தனது மகனை மிரட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
எனது மகன் சாகில், விடுதியில் தங்கி இருந்து மும்பை ஐ.ஐ.டி.யில் படித்து வந்தார். கல்லூரியின் முதல் ஆண்டு சுமூகமாக சென்றது.
2-ம் ஆண்டில்தான் அவருக்கு பிரச்சினைகள் தொடங்கின. கடந்த 3 மாதங்களாக சாகில் கடுமையான மன உளைச்சலுக்கும், சாதி கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்.
சாகில் தேர்வு எழுதிய போது பேராசிரியர் சூர்ய நாராயண் துல்லா தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் இருந்தார். மும்பை ஐ.ஐ.டி. இயக்குனரின் தூண்டுதலின் பேரில் அவர் எனது மகனை சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார்.
தான் ஒரு தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் என்பதால், தன்னை பொய் வழக்கில் எளிதாக சிக்க வைத்துவிட முடியும் என்று பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா ஏற்கனவே மிரட்டியதாக சாகில் ஒருமுறை என்னிடம் தெரிவித்துள்ளார்.
எனவே என் மகனை தற்கொலைக்கு தூண்டியதற்கு சூர்யநாராயண் துல்லாவே காரணம். அவர் மீதும், மற்ற உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் கூறி இருந்தார்.
முன்னதாக சாகிலின் தாயாரும் தனது மகன் துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். அவர் கூறுகையில் ‘என் மகன் கொல்லப்பட்டு விட்டான். அவன் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளான். எங்களுக்கு நீதி வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் சூர்ய நாராயண் துல்லா மீது மும்பை வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 2 பேரின் பெயர்களை போலீசார் வெளியிடவில்லை.
இந்த விசாரணை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.