

தலைநகர் டெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் விடுதி கட்டிடம் ஒன்று இடிந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள அந்த கட்டிடம் PG (Paying guest) தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சுமார் 50 மாணவர்கள் வரை தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணி சுமாருக்கு கட்டிடமானது இடிந்து விழுந்துள்ளது. இதில் உள்ளே தங்கியிருந்த பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர்.
தகவலறிந்து விரைந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கினர். இதுவரை ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனையோரை மீட்கும் பணிகள் தீவிர கதியில் நடந்து வருகின்றது.
மீட்பு பணியாளர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடிந்து விழுந்த கான்கிரீட் கூரையின் கீழ் நபர் ஒருவர் சிக்கிய நிலையில், அவரை மீட்பு பணியாளர்கள் மீட்க போராடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
சத்ய நிகேதன் பகுதியில் பல கல்லூரிகள் அமைந்துள்ளதால் அதனை சுற்றிய பகுதியில் மாணவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
எனவே அங்கு பல பிஜிக்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதுபோன்றதொரு பிஜி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.
தற்போதைய சம்பத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அருகில் இருக்கும் கட்டிடங்களில் வசித்து வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.