

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுகா அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா அருகே உள்ள கூடயத்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். நிலச்சரிவில் சிக்கி சுமதி என்ற பெண் உயிரிழந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் வாகமன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் வைக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் நாயர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகிளில் நிலச்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோட்டயம், பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா உட்பட கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மலைப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.