

கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது குழந்தை, நான்கு வயது குழந்தை மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாஹ் விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது விமான நிலையத்தில் பயணம் செய்யும் நபர் ஒருவர், தங்க கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்திற்கிடமான அந்த குடும்பத்திடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விமான நிலையத்திற்கு தந்தை தூக்கிவந்த எட்டு மாத குழந்தையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது குழந்தையின் டயப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட தந்தையை புலானாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
முன்னதாக கைது செய்யப்பட்ட நபரின் மனைவி, தான் அணிந்து வந்த சானிட்டரி நாப்கினில் மறைத்து வைத்திருந்த சுமார் 1.7 கிலோ மதிப்பிலான தங்கத்தை நெடும்பாசேரி விமான நிலையத்தில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் குடும்பத்தினரிடம் சோதனை குறைவாக இருக்கும் என்பதால், விமான நிலைய சோதனையை தவிர்ப்பதற்காக, குழந்தையின் தந்தை இவ்வாறு செயல்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பாக, கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளும் காணும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சர்வதேச வழிகள் மூலமாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும் வெளிநாட்டு தங்கம் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.