

புதுடெல்லி:
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் அடுத்தகட்ட நடவடிக்கையாக 15 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 3ம் தேதி நாடு முழுவதும் தொடங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை முதல் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது. சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கோவின் செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறார்களுக்கான தடுப்பூசியை தகுதியானவர்கள் போடுவதை பெற்றோர்கள் உறுதி செய்யுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது :
15 முதல் 18 வயது வரை உள்ள எனது நண்பர்களை கோவின் இல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் பெற்றோர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தகுதியானவர்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். நாம் பாதுகாப்பைக் குறைக்காமல், கொரோனாவுக்கு ஏற்ற நெறிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.