

நீட் (NEET) தேர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், இளைஞர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றையும் நாடாளுமன்றத்தில் தீர்த்து வைக்கவும் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சாடிய பிரதான், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறுகளை 'உருவாக்குவதற்காக' மாணவர்களை 'அரசியல் கருவிகளாக' பயன்படுத்துவதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.
எக்ஸ் தள பதிவு:
முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததை கண்டித்து, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல மூத்த தலைவர்கள் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்; அப்போது அவர்கள் பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறுகளை உருவாக்க மாணவர்களை வெட்கமின்றி அரசியல் கருவிகளாக பயன்படுத்துவதைத் தொடர்கின்றனர். அவர்கள் மாண்புமிகு பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா நடத்தத் தேர்ந்தெடுத்ததன் மூலம், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததுடன், நிறுவப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளையும் புறக்கணித்தனர்," என்று பிரதான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்த பின்னரும், காங்கிரஸ் ஜனநாயக ரீதியான விவாதத்தை விடுத்து அரசியல் நாடகத்தையே தேர்ந்தெடுத்தது. மாணவர்களுக்கான தீர்வுகளை காண்பது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை; மாறாக, அரசியல் ரீதியான தலைப்பு செய்திகளை பெறுவதற்காக இடையூறுகளை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
ராகுல் காந்தியை பொறுத்தவரை, இது மாணவர்களை பற்றியது அல்ல; விவாதத்திற்கான அனைத்து நியாயமான வழிகளும் திறக்கப்பட்ட பிறகும் மோதலை உருவாக்குவதை பற்றியதே இது
நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும், நாடாளுமன்றத்தில் நமது இளைஞர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றையும் தீர்க்கவும் எங்கள் அரசு 100 சதவீதம் உறுதியுடன் உள்ளது. அரசியல் பிரச்சாரத்திற்கான வெறும் கருவிகளாக நடத்தப்படுவதை விட மிக சிறந்ததையே இந்தியாவின் மாணவர்கள் பெற தகுதியானவர்கள். குழப்பத்திற்கு பதிலாக தெளிவையும், முழக்கங்களுக்கு பதிலாகத் தீர்வுகளையும், இடையூறுகளுக்கு பதிலாக பொறுப்புணர்வையும் அவர்கள் பெற தகுதியானவர்கள்.
மாணவர்களுக்கு வெறும் கோபத்தை மட்டும் வெளிப்படுத்துவது போதாது; அவர்களுக்கு பதில்களையும், சீர்திருத்தங்களையும், பொறுப்புக்கூறலையும் வழங்குவதே நமது கடமை. அதைத்தான் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளது," என்று பிரதான் கூறினார்.
பேச்சுவார்த்தை:
பிரதமர் அலுவலகத்தின் (PMO) இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் காந்தியை சந்தித்து, அவர் மேற்கொண்டு வரும் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.
நீட் (NEET) தேர்வு மற்றும் அது தொடர்பான இயக்கம் குறித்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தான் காந்தியிடம் கூறியதாகவும், ஆனால் காங்கிரஸ் தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக சிங் தெரிவித்தார்.
பின்னர், எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பகுதியிலிருந்து காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு பின்னப் விடுவிகப்பட்டனர்.