கர்ப்பமாக இருந்த பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி மரணம்: புகுந்த வீட்டினர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு!

மரணத்தில் சந்தேகம் இருப்பதால் பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டுகோள்
Nazia Khanam
Nazia Khanam
Published on

டெல்லி துவாரகா பகுதியில் வசித்து வந்த 30 வயதான கர்ப்பிணி அரசு உயர் அதிகாரி ஒருவர் அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாரால் அவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழக்கின் பின்னணி

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அதிகாரியாக பணிபுரிந்து வந்த நாஜியா கானம், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி ஆசாம் அலி கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் நாஜியா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் ஆசாம் அலி கான், மாமியார் சமீன் நிஷா, மாமனார் பாபர் அலி கான் ஆகியோர் தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாகவும், வீட்டை விட்டு விரட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நாஜியா தனது குடும்பத்தினரிடம் பலமுறை கூறியுள்ளார்.

சம்பவத்தன்று நடந்தது என்ன?

கடந்த ஆகஸ்ட் 21 அன்று அதிகாலை 4 மணியளவில், நாஜியா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

ஆனால், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நாஜியாவை கொலை செய்துவிட்டு, அதை தற்கொலை என நாடகமாடுவதாக பெண்ணின் தந்தை தவாப் கான் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மேலும் இதற்கு காரணமான கணவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கணவரின் விளக்கம்

நாஜியாவின் கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு நாஜியா அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் ஜன்னலில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை

நாஜியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மரணத்தில் சந்தேகம் இருப்பதால் பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பெண்ணின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com