

மும்பை:
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது.
ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமாக வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பாலத்துக்கு 2016 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்த அடல் சேது பாலத்தின் கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இப்பாலத்தில் விரிசல்கள் விழுந்ததாக பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால் பாலத்தில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை என்று மாநில அரசு தெரிவித்தது.
ஆனால், கடந்த ஜூன் மாதம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பின்னர் சரிசெய்யபட்டது என்றும் இதற்காக பாலத்தை கட்டிய ஸ்டார்பக் ஒப்பந்ததாரருக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் வழியாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.