

புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய அரசு மக்களைக் கவரும் வகையில் பல முக்கிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த 4 சதவீத உயர்வு மூலம் அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வு 2024, ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு அளிக்கப்படும்.
மேலும், மத்திய அரசு சமையல் எரிவாயு மானியத் திட்டத்தை அடுத்த ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 10.27 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியம் நேரடியாக சென்று சேரும் என தெரிவித்தார்.