முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு: பஞ்சாபில் விவசாயிகள் சாலை மறியல்

போக்குவரத்து முழுமையாக முடங்கியது.இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.
முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு: பஞ்சாபில் விவசாயிகள் சாலை மறியல்
Published on

சண்டிகர்:

பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள கனவுரி பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயி ஜகஜீத் சிங் தலேவால் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஜகஜீத் சிங்கின் உண்ணாவிரதம் நேற்றுடன் 34-வது நாளாக நீடித்தது.

இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீதும், ஜக ஜீத்தை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் பிற விவசாயிகள் மீதும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, டிசம்பர் 31-ந் தேதிக்குள் (நாளை) அவரை மருத்துவமனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு கெடு விதித்தது.

இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்றும் பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனை தெரிவித்தது.

இந்தச் சூழலில், ஜகஜீத் சிங்கை அரசின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஜகஜீத் சிங்கை மருத்துவ மனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ள நிலையில், காந்திய வழியில் தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாய அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாபில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அமிர்தசரசில் விவசாயிகள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள். பஞ்சாப்-அரியானா எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பஞ்சாபில் சில இடங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com