பா.ஜ.க.வின் அடுத்த தேசிய தலைவர்.. பிப்ரவரியில் பதவியேற்க வாய்ப்பு

பாரதிய ஜனதா கட்சியின் 60 சதவீத மாநில தலைவர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டதுபுதிய தலைவர் தற்போது மத்திய அமைச்சராக இருப்பவரா என்ற கேள்விக்கும் பதிலளித்தார்
பா.ஜ.க.வின் அடுத்த தேசிய தலைவர்.. பிப்ரவரியில் பதவியேற்க வாய்ப்பு
Published on

மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் [பாஜக] தேசிய தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்பட்டு வருகிறார்.

அக்கட்சியில் தேசிய தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்றாலும் கடந்த மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் புதிய தலைவர் பொறுப்பேற்பார் என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் 60 சதவீத மாநில தலைவர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாத மத்தியில் அவர்களுக்குப் பதிலாக புதிய தலைவர்கள் பதவியேற்பதற்கு ஏதுவாக தற்போது அமைப்பு தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும், இது தேசிய தலைவரை தேர்தெடுப்பதற்கான முன்னோட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே பிப்ரவரி இறுதிக்குள் புதிய தேசிய தலைவர் பொறுப்பேற்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் புதிய தலைவர் தற்போது மத்திய அமைச்சராக இருப்பவரா என்று கேட்டதற்கு, அது அரசாங்கத்திலிருந்தோ அல்லது அமைப்பிலிருந்தோ இருக்கலாம் என்றும், இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com