நேதாஜியையும் அவரது பாரம்பரியத்தையும் அவமதிக்கும் பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா ஃபார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்கள் குறித்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
Published on

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது பாரம்பரியத்தை அவமதித்ததற்காக பாஜக-வை கடுமையாகச் சாடிய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவர் மம்தா பானர்ஜி, இத்தகைய கருத்துகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நேதாஜி கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நேதாஜியின் கொள்ளுப் பேரனான சந்திர குமார் போஸ், முக்கிய அரசியல் கட்சிகள் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், ஆளும் பாஜக மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி ஆகியவற்றின் அரசியல் செயல்பாடுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த பாஜக-வின் மேற்கு வங்க தலைவர் கருத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-

நமது தேசிய நாயகனான நேதாஜி குறித்து பாஜக தலைவர்கள் பேசிய விதம் என்னைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேதாஜி சுபாஷ் போஸ் அவமதிக்கப்படும் விதம் குறித்து நான் மிகுந்த ஏமாற்றமும் மனவேதனையும் அடைகிறேன். இது வங்காளத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.

மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்

நேதாஜிக்கு இழைக்கப்படும் அவமதிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜிக்கும் சங் பரிவாரின் கொள்கை வழிகாட்டியான சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் இடையிலான அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்த சூழலில், நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஃபார்வர்ட் பிளாக் (Forward Bloc) கட்சியின் உறுப்பினர்களை குண்டர்கள் என்று விமர்சித்திருந்தார்.

இக்கருத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரிடையே விமர்சனங்களை எழுப்பியது. அவர்கள் இதனை மரியாதையற்ற செயல் என்று வர்ணித்தனர்.

நேதாஜி மீது எந்தவிதமான அவமரியாதையும் காட்டப்படவில்லை என்று பாஜக மறுத்துள்ளது.

தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படும் Gen-Z

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய இளம் தலைமுறையினர் (Gen-Z) தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் குடும்பங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டிய மம்தா, அந்த இயக்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வங்காளத்தில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒரு மிகப்பெரிய சிறைச்சாலையாக மாற்றிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com