அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ரூ.10,000 வழங்கிட பீகார் அரசு ஒப்புதல்!

வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பின்னரே அதற்கான வியூஸ்கள் சரிபார்க்கப்பட்டு தொகைக் கணக்கிடப்படும்.
Samrat Choudhary
Published on

பீகார் மாநில அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனை வீடியோக்களைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் "பீகார் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் ஊடக (திருத்த) விதிகள் 2026"-ன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தொகைக் கணக்கீடு

அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலின் கீழ் பதிவு செய்துள்ள கிரியேட்டர்களுக்கு, அவர்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவிற்கும் பெறப்படும் 1 லட்சம் வியூஸ்களுக்கு ரூ.10,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு தனிப்பட்ட வீடியோவிற்கு அளிக்கப்படும் அதிகபட்ச ஊக்கத்தொகை ரூ.1,00,000 வரை வரம்பு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 10 லட்சம் வியூஸ்கள் அல்லது அதற்கு மேல் பெறும் வீடியோக்களுக்கு முழு தொகையான ரூ.1 லட்சம் கிடைக்கும். வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பின்னரே அதற்கான வியூஸ்கள் சரிபார்க்கப்பட்டு தொகைக் கணக்கிடப்படும்.

பதிவு செய்தல் அவசியம்

இத்திட்டம் அனைத்து சோஷியல் மீடியா பயனர்களுக்கும் நேரடியாகப் பொருந்தாது. கிரியேட்டர்கள், பக்கங்கள் மற்றும் சேனல்கள் பீகார் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் முறையாகப் பதிவு செய்து எம்பேனல் செய்யப்பட்டிருக்க வேண்டும். போலி கணக்குகள், பாட் கணக்குகள் மற்றும் செயற்கையான வியூஸ்களைத் தடுப்பதற்காகக் கிரியேட்டர்களின் சேனல் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அரசுத் துறை குறிப்பிட்ட இடைவெளியில் தணிக்கை செய்து சரிபார்க்கும். இதற்கான விரிவான தகுதி வரம்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை விரைவில் வெளியிடும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com