வேலூர் ஜெயிலில் இருந்து நளினி நாளை பரோலில் வருகிறார்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூர் ஜெயிலில் இருக்கும் நளினி நாளை பரோலில் வருகிறார்.
நளினி
நளினி
Published on

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் அவரே ஆஜராகி வாதாடினார். அதை தொடர்ந்து நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டது.

நளினிக்கு அவரது தாயார் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் வழங்கியுள்ளனர். நளினி வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் தங்குகிறார்.

2 பேர் ஜாமீன் மற்றும் வேலூரில் தங்கும் இடம் குறித்த ஆவணங்களை நளினி சமர்ப்பித்துள்ளார்.

நாளை மாலை 4 மணிக்கு நளினி ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வருகிறார். அங்கிருந்து பாதுகாப்பாக ரங்காபுரத்தில் அவர் தங்கியிருக்கும், வீட்டுக்கு செல்கிறார். நளினியின் தாயார் மற்றும் குடும்பத்தினர் வேலூர் வருகின்றனர். நளினி அரசியல் பிரமுகர்களை சந்திக்க கூடாது. பேட்டியளிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன.

இந்தநிலையில் வேலூர் ஜெயிலில் நளினி, முருகன் சந்திப்பு இன்று நடந்தது. இதில் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து இருவரும் உருக்கமாக பேசிக்கொண்டனர்.

இங்கிலாந்தில் உள்ள அவரது மகள் ஹரித்திரா இன்னும் 2 வாரத்தில் வேலூர் வர உள்ளார்.

நளினி வேலூர் சத்துவாச்சாரியில் தங்குவதால் அவரது மகளின் திருமணம் வேலூரில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது.

மகள் திருமணம் சம்பந்தமாக முருகன் இதுவரை பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. திருமண தேதி குறித்த பின்னர் பரோலில் வருவது பற்றி முருகன் முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com