

பெண் பத்திரிகையாளர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தும் இன்னும் அவரை கைது செய்யாமல் இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இதுபற்றி கூறியதாவது:-
தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நடிகர் எஸ்.வி.சேகருக்கு உயர் பதவியில் உள்ள தலைமை செயலாளர் அடைக்கலம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இது உண்மையாக இருந்தால் கடும் கண்டனத்துக்குரிய நிகழ்வாகும். போலீஸ் தேடும் ஒருவருக்கு அடைக்கலம் கொடுப்பது உண்மை என்றால் அந்த அதிகாரி உயர் பொறுப்பில் இருக்கவே தகுதி கிடையாது.
எஸ்.வி.சேகர் விஷயத்தில் போலீசார் மவுனம் காப்பதும் , வேடிக்கை பார்ப்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்று மாநில அரசு அச்சப்படுவதால் எஸ்.வி. சேகரை போலீசார் கைது செய்யாமல் உள்ளதாக நினைக்க தோன்றுகிறது. எனவே போலீசார் சட்டப் படி இதில் நடந்து கொள்ள வேண்டும்.