புளூவேல் விளையாட்டை மத்திய- மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்: முத்தரசன் அறிக்கை

புளூவேல் விளையாட்டை மத்திய- மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புளூவேல் விளையாட்டை மத்திய- மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்: முத்தரசன் அறிக்கை
Published on

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மனித உயிர்களை பறிக்கும் புளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டால் மதுரையைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாண்டு படித்து வந்த அசாம் மாணவர் சசிகுமார் பேரா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

“50 நாட்கள், 50 சவால்கள்” என்ற இளமைப் பருவத்தில் உணர்ச்சிகளைத் தூண்டி, உயிர்ப்பலி எடுப்பதில் முடியும் பயங்கரவாத விளையாட்டாக்கி உள்ளது.

இந்த உயிர்க்கொல்லி விளையாட்டுக்கான பதிவிறக்கங்களை இணையத்திலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்ற அரசின் அறிவுரையை எந்தத் தொழில்நுட்ப நிறுவனங்களும் மதிக்கவில்லை. தனியார் துறையினர் மனித உயிர்களை பலிகொடுத்தும் லாப வேட்டையை தடையின்றி நடத்துவர் என்பதை ‘புளூவேல்’ விளையாட்டு வெளிப்படுத்தி உள்ளது.

இந்த வஞ்சக விளையாட்டுக் களத்தில் எத்தனை அப்பாவிகள் அகப்பட்டு கொண்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே நெஞ்சு பதை பதைக்கிறது.

சைபர் கிரைம் போலீசார் இதுபோன்ற விபரீத விளையாட்டுகளை காலத்தில் கண்டறிந்து தடுக்க தவறியது ஏன்? குழந்தைகளுக்கான தொலைக்காட்சியிலும் தேவையில்லா நிகழ்வுகளை காட்சிப்படுத்தி, குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

தொலைக்காட்சி தொடர்களிலும் அறிவுக்குப் பொருந்தாத மூடநம்பிக்கை வி‌ஷ விதைகள் தாராளமாகத் தூவப்படுகின்றன.

அறிவியல் யுகத்தில், அதுவும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிநவீன வளர்ச்சி காலத்தில் மனித சமூக வாழ்வை சீரழிக்கும், சிதைக்கும் ‘புளூவேல்’ போன்ற விளையாட்டுகளை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com