அண்ணாபல்கலை கழகத்தின் துணைவேந்தரை கவர்னர் திரும்ப பெற வேண்டும்- முருகுமாறன் எம்எல்ஏ

தமிழர்களின் உணர்வை மதித்து அண்ணாபல்கலை கழகத்தின் துணைவேந்தரை கவர்னர் திரும்ப பெற வேண்டும் என்று காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. முருகுமாறன் தெரிவித்தார்.
முருகுமாறன் எம்.எல்.ஏ.
முருகுமாறன் எம்.எல்.ஏ.
Published on

சிதம்பரம்:

அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முருகுமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகம் முழுவதும் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேளையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதமாக கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை தமிழக கவர்னர் நியமித்தது தமிழர்களின் இதயத்திலும், தலையிலும் தடிகொண்டு அடித்தாற் போல் உள்ளது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் சூரப்பா தமிழர்களுக்காக கர்நாடகாவில் காவிரி தண்ணீர் கேட்பாரா? தமிழக மக்களின் உணர்வு சார்ந்த வி‌ஷயங்களுக்கு கவர்னர் மதிப்பு அளிக்க வேண்டும். துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை கவர்னர் திரும்பபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர்கள் தங்களது ஆளுமைதிறன், மொழிப்புலமை நாகரீகத்தால் உலகத்தில் சிறந்து விளங்குகின்றனர். உலகெங்கும் பரந்து விரிந்துள்ள பல்வேறு நாடுகளில் முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் தமிழர்கள்.

தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசியல் சான்றோர்கள் குறிப்பாக ஜனாதிபதி தொடங்கி, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் நான் உள்ளிட்ட இந்தியாவில் பலரை அறிவுசார்ந்து உருவாக்கிய பல்கலைக்கழகமாக திகழ்கிறது. இந்த பல்கலைகழக துணைவேந்தர் பதவி காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மற்ற மாநிலத்தவரை நியமிக்ககூடாது. தமிழரைத்தான் துணை வேந்தராக நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

எனவே தமிழர்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். ஆட்சி பெரியதல்ல. தமிழக மக்களின் உரிமைதான் முக்கியம் இந்த நோக்கில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com