கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மும்பை கல்லூரி மாணவி கைது

கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மும்பை கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மும்பை கல்லூரி மாணவி கைது
Published on

மும்பை:

கோவா மாநிலம் கலான்குட்டே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கடந்த திங்கட்கிழமை இரவு, பெண் ஒருவர் அங்குள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அந்த ஓட்டலில் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், அந்த பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருந்து இளம்பெண் ஒருவர் பேசியிருந்ததை கண்டுபிடித் தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த இளம்பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மும்பையை சேர்ந்த ரங்கோலி பட்டேல் (வயது23) என்பதும், மலாடில் தங்கியிருந்து எம்.பி.ஏ. படித்து வருவதும் தெரியவந்தது. அவர் தனது ஆண் நண்பருடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றார். சம்பவத்தன்று இரவு இருவரும் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

அங்கு மதுபோதையில் ரங்கோலி பட்டேலுக்கும், அவரது ஆண் நண்பருக்கும் திடீரென சண்டை உண்டானது. ஓட்டலில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.

ஓட்டல் ஊழியர்கள் சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. இதனால் பொறுமை இழந்த ஓட்டல் ஊழியர்கள் இருவரையும் வெளியேற்றினர்.

இதனால் கோபம் அடைந்த ரங்கோலி பட்டேல் ஓட்டல் நிர்வாகத்தை பழிவாங்குவதற்காக போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு இருப்பதாக கூறியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த மாணவியை அதிரடியாக கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com