சமூக அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும்- ஜாமீனில் விடுதலையான முகிலன் பேட்டி

எத்தனை அவதூறு வந்தாலும் அனைத்தையும் கடந்து சமூக அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜாமீனில் விடுதலையான முகிலன் கூறியுள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்த முகிலனை அவரது குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்ற காட்சி.
ஜாமீனில் வெளியே வந்த முகிலனை அவரது குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்ற காட்சி.
Published on

திருச்சி:

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் முகிலன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது முகிலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒரு மிகப்பெரிய படு கொலையை பட்டப்பகலில் நடத்தியுள்ளார்கள். 12 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் இது தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டதற்காகவும், அதற்காக குரல் கொடுத்ததற்காகவும் என்னை கடத்தி சித்ரவதை செய்து உடல் முழுவதும் ஊசிகளை ஏற்றி பல மாதம் துன்புறுத்தியுள்ளனர்.

தமிழக மக்களுடைய தொடர் போராட்டம் மற்றும் பத்திரிகைகளில் வெளியானதன் விளைவாகத்தான் இன்று நான் உயிரோடு இருக்கிறேன். பல முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதும் வாக்கு மூலத்தை என்னிடம் இருந்து யாரும் பெறவில்லை.

தற்போது உயர்நீதி மன்றத்தில் அபிடவிட் மனு தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் உண்மையை பேசினால் அழிவு என்பது தான் போராளிகளின் நிலை. குளித்தலை அருகே ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை தூர் வாரவேண்டும் என்று கேள்வி கேட்டதற்காக பட்டப்பகலில் 2 பேரை கொலை செய்தார்கள். இது தான் இன்றைய நாட்டின் நிலைமையாக இருக்கிறது. எவ்வளவு அவதூறு வந்தாலும் அனைத்தையும் கடந்து சமூக அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com