2100-ம் ஆண்டில் வெப்ப அலைகள் அதிகரிப்பால் இந்தியாவில் உயிர்வாழ்வது சிரமம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

2100-ம் ஆண்டில் வெப்ப அலைகள் அதிகரிப்பால் இந்தியாவில் உயிர்வாழ்வது சிரமம் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக ‘அறிவியல் முன்னேற்றங்கள்’ என்ற ஆய்வு இதழில் கூறப்பட்டு உள்ளது.
2100-ம் ஆண்டில் வெப்ப அலைகள் அதிகரிப்பால் இந்தியாவில் உயிர்வாழ்வது சிரமம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Published on

டெல்லி:

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்கள் போன்ற காரணங்களால் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் பெரும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒடிசா (1998-ம் ஆண்டு), ஆந்திரா (2003), குஜராத் (2010) ஆகிய மாநிலங்கள் சமீபத்திய ஆண்டுகளில் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டன.

2015-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் நாடுகளில் ஏற்பட்ட பயங்கர வெப்ப அலைகளுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலை தொடர்ந்தால் 2100-ம் ஆண்டில் இந்தியாவில் உயிர்வாழ்வது கடினம் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக ‘அறிவியல் முன்னேற்றங்கள்’ என்ற ஆய்வு இதழில் கூறப்பட்டு உள்ளது.

பூமியில் நிலவும் வெப்ப நிலையை ஈரப்பதம் சேர்ந்தது (வெட் பல்ப் டெம்பரேச்சர்) மற்றும் ஈரப்பதம் சேராதது (டிரை பல்ப் டெம்பரேச்சர்) என விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர். இதில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்கிய பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம் சேர்ந்த வெப்பநிலையாக அறியப்படுகிறது.

இந்த வெப்பநிலை 2100-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் 35 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்போது அதிக வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தால் மனித உடல் தகுதி இழந்து நோய்களும், மரண எண்ணிக்கையும், அறிதல் திறன் குறைபாடுகளும் அதிகரிக்கும். நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் கூட மரணத்துக்கு தப்ப முடியாது என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் இதன் தாக்கம் இருந்தாலும், அடர்த்தியான மக்கள் தொகை நிறைந்த கங்கை நதிப்படுகை, சிந்து சமவெளிப்பகுதிகளில் இதனால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com