

மதுரை:
மதுரை சின்ன மத்திக் குளத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 19). இவர் மோட்டார் சைக்கிளில் ஒத்தக்கடை நோக்கிச் சென்றார்.
சுக்லாம்பட்டியைச் சேர்ந்தவர் நல்லுகுமார் (25). இவர் தனது நண்பர் பிரதீப் குமார் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தெரிசுபட்டி என்ற இடம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆனந்த், பிரதீப்குமார் பரிதாபமாக இறந்தனர். நல்லுகுமார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிச்சியத்தைச் சேர்ந்த திலகர், தனது மனைவி ஹம்சத் பேகத்துடன் மோட்டார் சைக்கிளில் கருப்பாயூரணி பகுதியில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் திலகர் பரிதாபமாக இறந்தார். கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.