கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி- விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி- விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

கள்ளக்குறிச்சியில் புதிய வேனுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான வாகன ஆய்வாளர் ஜாமீன் மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Published on

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சியில் புதிய வேனுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு (வயது 55) என்பவரையும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது உதவியாளர் செந்தில்குமாரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அதனை தொடர்ந்து இருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாயை கைப்பற்றினர். மேலும் இருவருடைய வங்கி கணக்குகளையும், பாதுகாப்பு பெட்டகங்களையும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலமாக போலீசார் முடக்கி வைத்தனர்.

இதனிடையே பாபு, செந்தில்குமார் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜரானார். இவ்வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.

வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை திறந்து ஆய்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் அவர்கள் சாட்சியங்களையும், ஆவணங்களையும் கலைத்து விடக்கூடும் என்று வாதிட்டார். இதையடுத்து பாபு, செந்தில்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை துறை ரீதியாக சஸ்பெண்டு செய்து சென்னை போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com