

புதுடெல்லி:
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது.
இந்நிலையில், ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காகவும், விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர், இளைஞர்கள், மகளிர்களுக்கான மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் விரிவான வகையில் பயனாளிகளை சென்றடைவது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களை சேர்ந்த முதல் மந்திரிகள் மற்றும் அவற்றின் சில மாநிலங்களின் துணை முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் என பா.ஜ.க. தலைமை நிலையத்தின் ஊடகப்பிரிவு தலைவர் அனில் பலூனி இன்று அறிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, 19 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #BJP #Modi