

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.
தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு நவாஸ் ஷரிப் விண்ணப்பித்திருந்தார். அவரையும் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோரையும் 3 நாட்கள் பரோலில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குல்சூம் நவாஸ் ஆன்மா சாந்தியடைய லண்டன் நகரின் ரிஜென்ட் பார்க் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நாளை ‘ஜனாஸா’ தொழுகை நடைபெறுகிறது. பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படும் குல்சூமின் உடல் லாகூரில் உள்ள நவாஸ் ஷரிப் வீட்டில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.