

சட்டசபையில் நேற்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசி முடிப்பதற்கு மதியம் 2 மணி வரை ஆகிவிட்டது. அதன்பிறகு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பதில் அளித்து பேசினார்கள். இது நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தது.
அந்த சமயம் சட்டசபையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் வெளியேற தொடங்கினார்கள்.
இதுகுறித்து ஒரு எம்.எல்.ஏ. கூறுகையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் முக்கிய போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை பார்க்க வேண்டி உள்ளதால் முன் கூட்டியே தங்களது அறைக்கு செல்வதாக தெரிவித்தனர்.
இதனால் ஆளும் கட்சி வரிசைகளிலும், எதிர்கட்சி வரிசைகளிலும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.