சேலம் மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடிய சேலம் மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி உள்ளார்.
சேலம் மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

சென்னை:

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து ‘இயற்கையை காப்பாற்றுவோம்’ என்ற முழக்கத்துடன் போராடி வந்த சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் இந்த குதிரை பேர அரசு கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். கதிராமங்கலத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றெல்லாம் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒரு பக்கம் வாக்குறுதி கொடுத்துவிட்டு, இன்னொரு புறம் ஜனநாயக ரீதியாக போராடும் மாணவி, பேராசிரியர் உள்ளிட்டோர் மீதும், கிராம மக்கள் மீதும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்வதும், மாணவி என்று கூட பாராமல் குண்டர் சட்டத்தில் அடைப்பதும் தமிழகத்தில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்பு போராடியதற்காக மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது, கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட கிராம மக்களை ஜாமீனில் விடுவிக்கவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு காவல்துறை வாதிடுவது- இந்த நடவடிக்கைகள் எல்லாம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை விமர்சிப்பவர்கள் மீது இங்குள்ள குதிரை பேர அரசு தொடுக்கும் போர் போல் அமைந்திருப்பது மட்டுமின்றி, மனிதாபிமானமற்ற பழிவாங்கும் நடவடிக்கைகளாக இருக்கின்றன.

மாணவியை இப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யும் மாநிலத்தில் உள்ள சில போலீஸ் அதிகாரிகள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறார்களா? என்ற அடிப்படை கேள்வியே இப்போது எழுந்து விட்டது.

ஆகவே காவல்துறை மூலம் அடக்குமுறையில் ஈடுபடும் போக்கை உடனடியாக இந்த குதிரை பேர அரசு கைவிட வேண்டும். சேலம் மாணவி வளர்மதி, திருமுருகன் காந்தி ஆகியோருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுவிக்க வேண்டும். பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com