

சென்னை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லாத்துறையிலும் தமிழகம் சிறந்தோங்கி விளங்குகிறது. தொழில் தொடங்குவதற்கான மாநிலத்தில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதற்கு முதல்-அமைச்சரின் அயராத உழைப்பே காரணம்.
பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் இருந்து விளையாட சென்று வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு ஊக்கமும், ஆக்கமும் தருவதற்கு தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.