நேரக்கட்டுப்பாடு மே 3-ந் தேதி வரை தொடரும் - அமைச்சர் ஆர்பி உதயகுமார்

நேரக்கட்டுப்பாடு என்பது மே 3-ந் தேதி வரை அமுலில் இருக்கும் எனவும் எந்தவித தளர்வும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
Published on

மதுரை:

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று மதுரை திருமங்கலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் இந்தத் தடை காலங்களிலும் அனைத்து மக்களுக்கும் முழு உணவு பாதுகாப்பினை வழங்கியுள்ளார். ஏற்கனவே 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் அரிசி, பருப்பு எண்ணெய் சர்க்கரை வழங்கினார்.

தற்போது இந்த மாதத்திற்கும் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை ஆகியவற்றை விலையில்லாமல் வழங்க அரசாணை பிறப்பித்து உள்ளார்.

தற்பொழுது முதல்-அமைச்சர் வழி காட்டுதல் படி ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 5 கிலோ கொண்ட காய்கறி தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

தினந்தோறும் 10 ஆயிரம் குடும்பங்கள் வீதம் அவர்கள் இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட்டுள்ளது மேலும் இதில் மக்கள் வரவேற்பை பொறுத்து மேலும் அடுத்த கட்டமாக விரிவுபடுத்தப்படும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லி வருகிறார். அதுவும் இந்த நேரத்தில் வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அதை தமிழக மக்களும் பாராட்டி வருகின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் ஸ்டாலின்.

வைரஸ் சோதனை செய்யும் கருவிகள் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபட கூறிவிட்டார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இருப்பினும் குற்றம்சாட்டுவது அரசியலுக்காகத் தான் என்பது உண்மை.

கொடூரமான வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடிப்படையில் வைரஸை கண்டுபிடிக்கும் கருவிகள் தமிழகத்திற்கு வாங்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக நேற்று மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என்பது மிகுந்த மன மகிழ்ச்சியை அளித்தது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு 20-ந் தேதிக்கு (நாளை) பிறகு என்ன விதமான தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார்.

அதுவரை 144 தடை உத்தரவு என்பது வருகிற மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேரக்கட்டுப்பாடு என்பது மே 3-ந் தேதி வரை அமுலில் இருக்கும். எந்தவித தளர்வும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com