

கல்வி, வேலைவாய்ப்பில் உரிய முன்னுரிமை கோரி நாளை நாடு முழுவதும் போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தலித் வன்கொடுமை சட்டம் தொடர்பாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த 2-ம் தேதி தலித் அமைப்புகள் நாடு தழுவிய அளவில் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறைக்கு பத்துக்கும் அதிகமான உயிர்கள் பலியாகின. ஏராளமான பொதுச் சொத்துகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் தங்கள் இனத்தவர்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதையடுத்து, கடந்த 2-ம் தேதி நடந்ததைபோல் வன்முறை சம்பவங்கள் நிகழாதவாறும், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ’விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில், தேவைக்கேற்ப ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் மாநில அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலும் அனைத்து பகுதிகளிலும் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.