

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகத்திற்கு அருகே இன்று காலை பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. காபூலின் முக்கிய பகுதியான அங்கு, பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே, அங்கு தீவிரவாதிகள் லாரி மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மிகப் பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுவதும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் கழிவுநீர்த் தொட்டியின் கீழ் இருந்து சுமார் 1500 கிலோ எடையிலான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட பெரும்பாலான தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தலிபான் தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஹக்கானி தீவிரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று ஆப்கானிஸ்தான் உளவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
தீவிரவாத அமைப்புகளின் இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என்று ஆப்கான் பிரதமர் அஷ்ரப் கானி கண்டனம் தெரிவித்துள்ளார்.