

சென்னை:
தமிழக சட்டசபையில், தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் 2009-ம் ஆண்டு சட்டத்தின்படி, திருமணம் எந்த இடத்தில் நடக்கிறதோ, அந்த பகுதியில் உள்ள பதிவாளரின் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.
இந்த நிலையில் கடந்த 2019-20-ம் ஆண்டின் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை தொடர்பான மானிய கோரிக்கையின் போது, மணமகன் அல்லது மணமகள் தங்கும் இடத்தில் உள்ள பதிவாளரின் அலுவலகத்திலும் திருமணம் பதிவு செய்வதை எளிதாக்குவதற்காக சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.