

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டிருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் ராவணனாக நடித்த தல்பீர் சிங் என்ற வாலிபரும் ரெயில் விபத்தில் இறந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 மாத கைக்குழந்தை உள்ளது. தல்பீல் சிங் இறந்ததையடுத்து அவரது மனைவி மற்றும் தாய் இருவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
மகன் தல்பீர் சிங் இறந்துவிட்டதால், நிர்கதியாக நிற்கும் மருமகளுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். #AmritsarTrainAccident #Dussehra #Ravana