

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் வீடு ஜம்முவின் பதிண்டி பகுதியில் உள்ளது. இவரது வீட்டை நோக்கி இன்று மர்ம நபர் ஒருவர் காரில் வந்துள்ளார். வந்த வேகத்தில் வீட்டின் முன்பக்க கேட் மீது காரை மோதிய அந்த நபர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தும் அவர் நிற்காமல் உள்ளே சென்றுள்ளார். எனவே, பாதுகாப்பு படையினர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜம்மு சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், “பரூக் அப்துல்லா வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடனும் கைகலப்பில் ஈடுபட்டார். இதில் ஒரு அதிகாரிக்கு காயம் ஏற்படடது. அதன்பின்னர், வீட்டிற்குள் நுழைந்து சில பொருட்களை அடித்து நொறுக்கினார். இதனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்” என்றார். #FarooqAbdullah #IntruderShotDead