மலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படியா? பிரதமர் மகாதீர் முகமது கண்டனம்

மலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். #Malaysia #MahathirMohamed
மலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படியா? பிரதமர் மகாதீர் முகமது கண்டனம்
Published on

கோலாலம்பூர்:

மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு 2 பெண்கள் ஒரு காரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, பிடிபட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவர்கள் குற்றவாளிகள் என கண்டு தலா 3,300 ரிங்கிட் (சுமார் ரூ.57 ஆயிரம்) அபராதம் செலுத்தவேண்டும் என்றும், அவர்களுக்கு தலா 6 பிரம்படியும் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.

அதைத் தொடர்ந்து அந்த கோர்ட்டில் வைத்து சுமார் 100 பேர் முன்னிலையில் அந்தப் பெண்களுக்கு பிரம்படி தரப்பட்டது. இதற்கு எதிராக அங்கு கருத்துக்கள் எழுந்தன.

வடக்கு மாகாணமான டெரங்கானுவில் இப்படி பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

இந்த நிலையில் அந்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த தண்டனை தொடர்பாக நான் மந்திரிகளிடம் விவாதித்தேன். அவர்கள் இந்த தண்டனை, இஸ்லாமிய மதம் கூறுகிற நீதியையும், சகிப்புத்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை என்று கருதுகின்றனர். இந்த தண்டனை இஸ்லாமிய மதம் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதேபோன்ற குற்றங்கள் நடக்கிறபோது, சற்று லேசான தண்டனைகளை நாம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாம் என்பது மக்களை இழிவுபடுத்துகிற மதம் அல்ல என்பதை நாம் காட்ட வேண்டியது முக்கியம்” என குறிப்பிட்டார். #Malaysia #MahathirMohamed 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com