மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் தீ விபத்து - உடனே அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. உடனே அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. #MaduraiMeenakshiAmmanTemple
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் தீ விபத்து - உடனே அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
Published on

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 19 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும் அப்பகுதியில் உள்ள மண்டபத்தின் மேற்கூரைகள், தூண்கள் சேதம் அடைந்தன. விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல், ஆகம விதிப்படி புனரமைப்பு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மீண்டும் திடீரென தீப்பற்றியது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் முதல் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் மகாலட்சுமி சன்னதி அமைந்துள்ளது. அதன் அருகே சிவாச்சாரியார்கள் தாங்கள் குலதெய்வமாக வணங்கும் பொற்படியான் சன்னதி அமைந்துள்ளது. சிவாச்சாரியார்கள் தங்கள் வீட்டு விசேஷங்கள் குறித்து அடிக்கும் பத்திரிகைகளை அந்த கதவு வழியாக உள்ளே போட்டு வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த சன்னதி பகுதியில் இருந்து நேற்று காலை திடீரென புகை வந்தது. தகவல் அறிந்ததும் கோவில் ஊழியர்கள் விரைந்து வந்து, தீயை உடனே அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விசாரணையில், பக்தர் ஒருவர் கொளுத்திய சூடத்தில் இருந்து பரவிய தீயானது, அங்கிருந்த பத்திரிகையின் மீது பட்டதால் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.  #MaduraiMeenakshiAmmanTemple

X

Maalai Malar
www.maalaimalar.com