கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை நீட்டிப்பு

கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை நீட்டிப்பு
Published on

மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நடந்து வரும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. எனவே இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுபோல மேலும் பலர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளை நிறுத்தி வைக்கும்படி கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

முடிவில், ‘வழக்கின் எதிர்மனுதாரர்களுள் ஒருவரான அ.தி.மு.க. தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டியது உள்ளது. அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com