

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு. சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
‘விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் தொடர்ந்து 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். அவர் அனுமதி வழங்க மறுக்கிறார்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மெரினா கடற்கரையில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி வழங்க முடியாது. அங்கு கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, 90 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது. அதே நேரம், ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று போலீசாருக்கு உத்தர விட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், ‘தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினால், தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக் கொள்கிறோம்.
மேலும், வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி வழங்க தயாராக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.