சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை - சென்னை ஐகோர்ட்

இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு நடத்த இருந்த போராட்டத்திற்கு மார்ச் 11-ம் தேதி வரை சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை ஐகோர்ட் (கோப்பு படம்)
சென்னை ஐகோர்ட் (கோப்பு படம்)
Published on

சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

போலீஸ் அனுமதியின்றி ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் போராட்டக்கார்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள், போலீசார்கள் என இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

போராட்டக்காரகள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனும் வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையில், சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நாளை தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு தடைகோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரத்த நீதிபதிகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்ச் 11-ம் தேதி வரை தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com