ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது?: ஐகோர்ட் நீதிபதி கேள்வி

ஜெயலலிதா மகள் என உரிமை கோரி அம்ருதா தாக்கல் செய்த வழக்கில், ஜெயலலிதா உடலை டி.என்.ஏ பரிசோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது?: ஐகோர்ட் நீதிபதி கேள்வி
Published on

சென்னை:

ஜெயலலிதாவின் மகள் என்று தம்மை உரிமை கொண்டாடி வரும் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் வாரிசு என்பதை உறுதி செய்வதற்காக தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். ஆனால், அவரது மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அத்துடன் ஐகோர்ட்டில் முறையிடவும் அறிவுறுத்தியது. 

இதனையடுத்து, ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி அம்ருதா சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

உண்மையான வாரிசு என்று ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் டி.என்.ஏ சோதனைக்கு அனுமதிக்கலாம் என்றும், விளம்பரத்திற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், டி.என்.ஏ சோதனைக்கு அனுமதித்தால் நிறைய பேர் இது போல வழக்கு தாக்கல் செய்ய தொடங்கி விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இது தங்களது சொந்த விவகாரம் என்றும், விளம்பரம் தேட முயற்சிக்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கிடையே நீதிபதி வைத்தியநாதன், “ ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது வாரிசு உரிமை கோராமல் தற்போது இறந்த பின்னர் கோருவது ஏன்? என்றும், தற்போது எதன் அடிப்படையில் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிட முடியும் என்று மனுதாரரை நோக்கி நீதிபதி கேள்வி கேட்டார். இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com