

ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.
அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி, இன்று காலையில் ஐகோர்ட்டுக்கு வரும் வழியெல்லாம் போக்குவரத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருந்ததை பார்த்தேன். அத்தனை பேரும், அங்கு சர்வ சாதாரணமாக உட்கார்ந்துக் கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை செய்யவில்லை. சிக்னலில் என்னுடைய கார் உள்பட ஏராளமான வாகனங்கள் நிற்கின்றன. பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும், அனைத்து வாகனங்களும் புறப்படும் நேரத்தில், ஒரு பெண்மணி சாலை குறுக்கே ஓடுகிறார். அதை கண்டுக் கொள்ளாமல், போலீஸ்காரர் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசு வக்கீல், அது எந்த சிக்னல் என்று கூறினால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என்றார்.
அதற்கு நீதிபதி, அந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. என்னைப் பொருத்தவரை பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தான் முக்கியம். அந்த பெண்மணி மீது வாகனங்கள் மோதி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒரு இடம் மட்டுமல்ல, சென்னை முழுவதும் 99 சதவீத போக்குவரத்து போலீஸ்காரர்கள் வேலை செய்வது இல்லை.