கட்சி அனுமதியின்றி செயல்படுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் மீது மதுசூதனன் திடீர் பாய்ச்சல்

அமைச்சர் ஜெயக்குமார் கட்சி தலைமையின் அனுமதியின்றி தான்தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறார் என மதுசூதனன் கூறினார்.
கட்சி அனுமதியின்றி செயல்படுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் மீது மதுசூதனன் திடீர் பாய்ச்சல்
Published on

காசிமேடு பவர்குப்பம், வினாயகபுரம் பகுதிகளில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், பால் பாக்கெட்டுகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்சியில் மூத்த உறுப்பினர்கள் இருந்தால் தான் செல்லாக்காசாக ஆகி விடுவோம் என்ற பயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி தலைமையின் அனுமதியின்றி தான்தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஜெயக்குமார் கூறுகிறார். ஆனால் அதுபோன்று இதுவரை நடந்ததில்லை.

1996-ம் ஆண்டு முதல் என்னுடைய அரசியல் பயணத்துக்கு ஜெயக்குமார் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். மீனவ மக்கள் மீது அக்கறை உள்ளதுபோல் காட்டிக்கொள்ளும் அவர் இதுவரை மீனவ மக்கள் முன்னேற்றத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


காசிமேட்டில் சீன என்ஜின்கள் பயன்படுத்துவதற்கு எதிராக மீனவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் ஜெயக்குமார் சீன என்ஜின்கள் பயன்படுத்தும் விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவர் மீது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமல் ஒரு சிறந்த நடிகர். ஆனால் மக்களிடம் செல்வாக்கு இல்லை. நிலவேம்பு கசாயத்துக்கு எதிராக கருத்து கூறி உள்ளார். அப்படியென்றால் மாற்று மருந்து இருந்தால் சொல்லுங்கள். அதை கொடுக்கிறோம்.

தினகரன் எதையோ மனதில் வைத்துக்கொண்டு காய் நகர்த்தி வருகிறார். அது என்னவென்று தெரியவில்லை. அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com