

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு (மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி) இதுவரை எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
இதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
மத்திய அரசு சமீபத்தில் அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு அளித்து வந்த இந்த பாதுகாப்பை ரத்து செய்து விட்டது. அதற்கு மாற்றாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், எஸ்.பி.ஜி.எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் படை தொடர்பான சட்டத்தில் சில திருத்தங்களை பாராளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சில தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எஸ்.பி.ஜி.சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பை விலக்குவதற்காகவே இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருவதுபோல் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. பழிவாங்கும் அரசியல் அணுகுமுறை காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது. அது பாஜகவின் கலாசாரம் அல்ல.
அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்தில் வசிக்கும் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் 5 ஆண்டுகள் வரை சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்படும்.
முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோருக்கான சிறப்பு படை பாதுகாப்பு விலக்கப்பட்டபோது யாரும் இதைப்பற்றி ஒன்றுமே பேசியதில்லை.
சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பை விலக்கியதால், சோனியா காந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பு தொடர்பாக இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்ற சாயத்தை பூச முயற்சி நடைபெறுகிறது. அவர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்படவில்லை.
அவர்களின் உயிர்களுக்கான அச்சுறுத்தலின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.