பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா
பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா

ரஷ்யா செல்கிறார் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா

பாராளுமன்ற தூதரக உறவுகளை மேம்படுத்துவதற்காக பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளார்.
Published on

புதுடெல்லி:

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாராளுமன்ற உறவை மேம்படுத்துவதற்கான பொதுவான உறுதிமொழி அப்போதைய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் ரஷ்ய சபாநாயகர் வயச்செஸ்லாவ் வோலோடின் ஆகியோரால் டிசம்பர் 10, 2018 அன்று உருவாக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி விளாடிவோஸ்டோக்கில்  சந்தித்தனர். அந்த சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் பாராளுமன்ற உறவுகள் குறித்த முக்கியத்துவம் மேலும் சிறப்பிக்கப்பட்டது.

இரு தரப்பினரும் தங்கள் பாராளுமன்றங்களுக்கிடையேயான தீவிர ஒத்துழைப்பை வரவேற்றனர். மேலும் இருதரப்பு உறவுகளின் மதிப்புமிக்க அங்கமாக பாராளுமன்றத் தொடர்புகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டனர். மேலும் ரஷ்யாவின் டுமா மாநில தலைவர் டிசம்பர் 2018 ல் இந்தியா வருகை தந்ததை அடுத்து, இந்திய சபாநாயகர் 2019ல் ரஷ்யா வருவதை எதிர்நோக்கியுள்ளனர், என கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தூதரக உறவுகள் மேம்பாடு குறித்து விவாதிக்க பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அடுத்த மாதம் ரஷ்யா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் பிர்லா தலைமையில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு செல்லும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறவுகளை மேம்படுத்துவதால், பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் பொதுமக்கள் அளவிலான ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும் என இரு நாடுகளின் எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கருதுகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com