பா.ஜ.க. எம்.பி உடல் நலக்குறைவால் மரணம்: இரங்கல் தெரிவித்து மக்களவை ஒத்திவைப்பு

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதி பா.ஜ.க எம்.பி சன்வர் லால் ஜாட் உடல் நலக்குறைவால் காலமானதற்கு இரங்கல் தெரிவித்து மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
பா.ஜ.க. எம்.பி உடல் நலக்குறைவால் மரணம்: இரங்கல் தெரிவித்து மக்களவை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 1955-ம் ஆண்டு பிறந்தவரான சன்வர் லால் ஜாட் வணிகவியலில் முதுகலை பட்டமும், ஆராய்ச்சி பட்டமும் பெற்றுள்ளார். கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் பா.ஜ.க.வின் மாநில விவசாய பிரிவு தலைவராகவும், நஸிராபாத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது அஜ்மீர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சச்சின் பைலட்டை வீழ்த்தி சன்வர் லால் வெற்றி பெற்று தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்தாண்டு உடல் நலக்குறைவு காரணமாக மந்திரி சபையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த மாதம் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற போது சன்வர் லால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மரணமடைந்தார்.

இந்நிலையில், சன்வர் லால் ஜாட்டின் மரணத்திற்கு பாராளுமன்ற மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் வாசிக்க அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com