

அகர்தலா:
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 18-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ந்து ஐந்து முறை ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்ற பா.ஜ.க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக அம்மாநிலத்தில் பிரிவினைவாத சிந்தாத்தங்களை கொண்ட ஐ.பி.எப்.டி கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது.
பா.ஜ.க.வுக்கு இடம் கொடுத்துவிட கூடாது என்பதற்காக இடதுசாரிகள் கடுமையாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தலாய் மாவட்டத்தில் உள்ள சவுமானுவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மாணிக் சர்கார் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ஆட்சி, அதிகாரத்தை பிடிப்பதற்காக பா.ஜ.க நடைமுறையில் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆனால், திரிபுரா மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளான 2 கோடி வேலை வாய்ப்புகள், கருப்பு பணம் ஒழிப்பு ஆகியவை நிறைவேற்றப்படாமல் உள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கல்வி மற்றும் மருத்துவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது.
பா.ஜ.க பணக்காரர்கள் அடங்கிய கட்சி, அதனால் பணக்காரர்களுக்கு தான் அது பணியாற்றும். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் மாநில அரசைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பிரிக்கப் பார்க்கின்றது. ஆனால், கல்வியில் மட்டுமல்ல மனிதவள குறியீட்டில் நாம் முன்னிலையில் உள்ளோம். குடிமக்களை மாநில அரசு தங்களது குழந்தைகளை போல பாவித்து வருகின்றது.
மாநிலத்தை பா.ஜ.க.விடம் இருந்து காக்க தங்களது உயிரையும் தியாகம் செய்ய இடதுசாரிகள் தயாராக உள்ளனர். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அவர்களை (பா.ஜ.க) மண்ணில் காலூன்ற விடமாட்டோம்
இவ்வாறு மாணிக் சர்கார் பேசினார். #Tripura #ManikSarkar #BJP